Wednesday, May 6, 2015

'பாலி 9 : பாகம் 4' - "மயூரன் நினைத்திருந்தால் எப்பவோ தப்பியிருக்கலாம்"


தமிழர்கள் சகல துறைகளிலும் திறமைவாய்ந்தவர்கள் என்ற விடயத்தில் நல்லது கெட்டது எல்லாமே அடங்கும் என்பதற்கு உலகின் எல்லா மூலையிலும் உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அந்தவகையில், மயூரன் சுகுமாரனின் சாகச படலம் கடைசியில் அவனை எந்த முடிவுக்கு கொண்டுபோய் சேர்த்தது என்பதிலிருந்து அவனது பாதை எத்துணை கொடியது என்பதை தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அடித்தும் இடித்தும் சொல்லியிருக்கிறது.

ஆனால், அந்தவிதமான சட்டவிரோத பாதையிலும் - இது ஒன்றும் பெருமை தரக்கூடிய விடயம் இல்லை ஆயினும் - மயூரன் எவ்வளவு கண்ணியமாக நடந்துகொண்டான் என்பதை அவனுடன் கைதுசெய்யப்பட்ட 'பாலி 9' கைதிகளில் ஒருவனான டான் டக் என்பவன் தனது முகநூலில் பதிவுசெய்திருக்கிறான்.

டான் டக் தற்போது போதைப்பொருட்கடத்தல் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக இந்தோனேஷிய கட்டுப்பாட்டில் உள்ள ஜாவா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளான். இவனது வழக்கு முதன் முதலாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து மேன் முறையீடு செய்தபோது, நீதிமன்றம் இவனது தண்டனை காலத்தை 20 வருட சிறைத்தண்டனையாக குறைத்தது. அதனையும் எதிர்த்து மீண்டும் மேன் முறையீடு செய்தபோது, புதிய தகவல்களையெல்லாம் தோண்டி எடுத்து அரச தரப்பு சட்டத்தரணிகள் ஆழமாக ஆப்பு இறுக்க, நீதிமன்றம் டான் டக்கிற்கும் மரண தண்டனை வழங்குவது எனத்தீர்ப்பளித்தது. இது அடுப்பிலிருந்து நெருப்பில் விழுந்த கதையாகிப்போக, சுமார் இரண்டு வருடங்கள் போராடி அடுத்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, நீதிமன்றம் மீண்டும் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்து. இனி எந்த ஆணியும் புடுங்கவேண்டம் என்ற முடிவோடு உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு, பத்து வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருக்கிறான் டான் டக்.

அன்ட்ரூ ஷானைவிட மயூரனுடன் நெருங்கிய பழகிய டான் டக், மயூரனின் இழப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளான். இதுவரை தான் எவருக்கும் கூறாத விடயம் என்று மயூரனுடனாக தனது அனுபவத்தினை பின்வருமாறு பதிவு செய்திருக்கிறான்.

"பத்து வருடங்களுக்கு முன்னர் ஏப்ரல் 17 ஆம் திகதி,  பாலியின் பிரபல்யமான சுற்றுலா நகர் கூட்டாவிலுள்ள ஜப்பானிய உணவகம் ஒன்றில் நானும் மயூவும் உணவருந்திக்கொண்டிருந்தோம். அப்போது, போதைப்பொருட்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு பயணமான எமது குழுவின் நான்கு பேர் இந்தோனேஸிய விமானநிலையத்தில்வைத்து காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுவிட்டார்கள் என்ற தகவல் மயூவுக்கு கிடைத்துவிடுகிறது. அந்த சமயம், மயூ நினைத்திருந்தால், மிகவும் பாதுகாப்பாக இந்தோனேஷியாவை விட்டு உடனடியாகவே தப்பியிருக்கலாம். ஆனால், மயூ அதைப்பற்றி கிஞ்சித்தும் எண்ணாமல், ஹோட்டலில் உள்ள எமது குழுவின் மீதி இருவரையும் வேறு இடத்துக்கு மாற்றி, அவர்களை பாதுகாப்பாக நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டும் என்ற முடிவுடனேயே செயற்பட்டான். அந்த நேரத்தில், மயூவின் முடிவு எனக்கு உண்மையிலேயே ஆச்சரியத்தை அளித்தது.

"உணவகத்திலிருந்து உடனடியாகவே ஹோட்டலுக்கு விரைந்த மயூ, அங்கிருந்து எமது குழுவின் இரண்டுபேரையும் துரிதமாக அவர்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு வேறு இடத்துக்கு புறப்பட தயாராகுமாறு கூறினான். அதற்கிடையில், மோப்பநாய்களுடன் ஹோட்டலை சு10ழ்ந்துகொண்ட இந்தோனேஷிய காவல்துறையினரும் போதைப்பொருள் தடுப்பு படையினரும் எமது இருப்பிடத்தை கண்டுபிடித்து எமது அறைகளுக்குள் பாய்ந்துவிட்டனர்" - என்று டன் டக் கூறியுள்ளான்.

பாலி 9 விவகாரத்தை முழுமையாக கையாண்ட இந்தோனேஷிய அதிகாரி நீதிமன்றுக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கையில் - ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆஸ்திரேலிய காவல்துறையிடமிருந்து எமக்கு கிடைத்த தகவலில் ஆஸ்திரேலிய பிரஜைகளின் இந்த போதைப்பொருட் கடத்தல் குறித்த எல்லா தகவல்களும் துல்லியமாக இருந்தபோதும், மயூரனின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. இந்தோனேஷிய காவல்துறை இந்த ஆஸதிரேலிய போதைக்கட்டத்தில் குழுவை எட்டு நாட்களாக கண்காணித்துக்கொண்டிருந்தபோதுகூட மயூரன் இந்த கூட்டத்தில் என்ன பங்கு வகிக்கிறான் என்று தெரிந்திருக்கவில்லை. நாம்கூட, அன்ட்ரூ ஷானின் மெய்ப்பாதுகாவலன்தான் மயூரன் என்று நம்பிக்கொண்டிருந்தோம்.

“ஏப்ரல் 17 ஆம் திகதி, கூட்டாவில் மேற்கொண்ட கைது நடவடிக்கையின்போது, இந்த இளைஞர்கள் தங்கியிருந்த அறையின்வெளியேதான் மயூரன் நின்றுகொண்டிருந்தான். காவல்துறையினர்தான் அவனை உள்ளே தள்ளிச்சென்று எல்லோரையும் கூட்டமாக கைது செய்துகொண்டு வந்தனர். அவ்வளவுக்கு மயூரனின் பங்கு இந்த கூட்டத்தில் மிகவும் இரகசியமானதாகவும் மர்மமாகவும் இருந்தது" - என்று கூறியிருந்தார்.

தனது சகாக்களை இந்த கைது படலத்தில் கைவிட்டுவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் செயற்பட்ட மயூரனுக்கு எதிராக பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் மற்றும் பலத்த சாட்சியங்கள் சட்டத்தின் பாதையில் அவனை பாரதூரமான முடிவுக்கு அழைத்து சென்றுவிட்டதாக கூறும் டான், தனது வாழ்நாளில் மயூவை என்றைக்கும் மறக்கமுடியாது என்று கூறியுள்ளான்.

கடந்த 29 ஆம் திகதி, மயூரன் சுட்டுக்கொல்லப்படும் காட்சியை சிறையிலுள்ள தொலைக்காட்சியில் தான் நேரடியாக பார்த்ததாகவும் மயூவுக்கு ஏற்பட்ட முடிவால் அந்தக்கணம் தான் அதிர்ச்சியில் உறைந்துதுபோனதாகவும் தெரிவித்துள்ளான்.

மரணதண்டனையை நிறைவேற்றுவதற்காக தனித்தீவுக்கு மாற்றப்பட்ட மயூரன் தனது கடைசி நாட்களில் எவ்வாறான ஒரு மர்மம் நிறைந்த வாழ்க்கையை கழித்தான் என்பதை, மயூரன் வெளியே எழுதிய கடிதம் ஒன்று தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.



அந்த கடிதத்தில் மயூரன் எழுதுகையில் -

“இந்தோனேஷிய சிறையிலிருந்து இங்கு நாங்கள் மாற்றப்பட்டநாள் முதல் எல்லாமே ஓருவித மனக்குழப்பம் நிறைந்த நேரங்களாகவே கழிகின்றன. வெளியுலகில் என்ன நடக்கிறது என்று எமக்கு எதுவும் தெரியவில்லை. முன்பிருந்த சிறை எவ்வளவோ பரவாயில்லை. இங்கு நாம் பயங்கரமாக தனித்துவிடப்பட்டிருக்கிறோம்.

"சிறைக்கட்டுப்பாடுகள் அதிகம். ஆனாலும், இங்குள்ள காவலாளிகள் பரவாயில்லை. இயன்றளவு எமக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். ஏனைய கைதிகளுடன் நாங்கள் பேசுவது குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்குள்ள மிகச்சிறிய தேவாலயத்துக்கு நாங்கள் வாரம் ஒருமுறை சென்று வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளோம். இங்கு 17 பேர்தான் கிறீஸ்துவர்கள்.

"வெகுவிரைவில் எமக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.

"சித்திரம் கீறுவதை இங்கும் நான் கைவிடவில்லை. வரைவதற்கான பொருட்கள் வாங்கித்தருமாறு சிறை நிர்வாகத்தினரை கேட்டிருக்கிறேன். அதேவேளை, இருக்கும் பொருட்களை வைத்து வரைதல் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறேன். என்னுடன் ஒன்றாக இருந்து எனது வரைதலை ஊக்குவிப்பதற்கு இங்கு பெரிய அளவில் ஆட்கள் யாரும் இல்லை. இருந்தாலும் இங்குள்ள சிறைக்காவலாளி ஒருவர் தனது நண்பர் ஒருவரின் ஐந்து படங்களை வரைந்துதருமாறு கோரியுள்ளார். அந்தப்பணியில் நான் தற்போது ஈடுபட்டிருக்கிறேன்.

“ஆம்ஸ்ரடாம் சித்திரக்கண்காட்சியில் எமது வரைபடங்கள் வரவேற்பை பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. லண்டன் கண்காட்சியில் என்ன தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை. நான் இல்லாமல் எனது படங்கள் அரங்கேறும் சர்வதேச கண்காட்சி நடைபெறுவதை எண்ணும்போது மிகுந்த பொறாமையாக இருக்கிறது. ஆனால், நான் இல்லாமல் எனது படைப்புக்கள் பேசுவதில் எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.

“நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த கடிதம் உங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்று நம்புகிறேன்”

- என்று குறிப்பிட்டுள்ளான்.

“பாலி 9” என்ற தொடர் பற்றி, அண்மையில் வெளிநாடொன்றிலிருந்து பேசிய தோழி ஒருவர் -

“போதைப்பொருள் கடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்ட இரண்டு பேருக்காக உலகமே ஆதரவளித்தது என்றால் இதுதான் முதல்முறையாக இருக்கக்கூடும். அவ்வளவுதூரம், இந்த இரண்டு இளைஞர்களும் தங்கள் நன்நடத்தையின் மூலம் குற்றத்தின் பின்னரான மனமாற்றத்தின் மூலம் முழு உலகினதும் மனசாட்சியை புரட்டிப்போட்டுவிட்டனர். இவர்களது இந்த சாதனையின் முன்னால், எத்தனை எத்தனையோ ஆண்டுகளாக எழுதிவைத்த சட்டங்கள், நீதிவாசகங்கள் எல்லாம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன. ஆனாலும், ஒரு ஆளும் அதிகார வர்க்கத்தின் முரட்டு பிடிவாதத்தினாலும் அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காய்கள் ஆகிவிட்ட துரதிஷ்டத்தாலும் இந்த இளைஞர்களின் உயிர் இன்று பறிக்கப்பட்டிருக்கிறது” – என்றாள்.

"Capital punishment is as fundamentally wrong as a cure for crime as charity is wrong as a cure for poverty" - Henry Ford

(அடுத்த பத்தியில் சந்திப்போம்)

"பாலி 9 ; பாகம் 3" : ஆஸ்திரேலிய காவல்துறை வாய் திறந்தது!


"பாலி 9 ; பாகம் 2 "- மனதை உலுக்கும் மரணத்தின் கடைசிக்கணங்கள்!

"பாலி 9 ; பாகம் 1" - பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?


(இந்த தொடர் "கொழும்பு மிரர்" www.colombomirror.com இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது ஆகும்) 

No comments:

Post a Comment

தலைவர்களை நினைவுகூரும் அரசியலின் பின்னால்!

'1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராக வந்த அமிர்தலிங்கம் அவர்கள், ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்ச...